சுமை தாளாமல்
கடவுளிடம் புலம்புகிறது
கழுத்து
முடி மூளை மூக்கு இதில்லாமல்
முன்னூற்றுச்சொச்சம் எலும்புகள்
கண்கள் அதை
முறையின்றி பயன்படுத்தியதால்
மூக்கின் மேல் சுமையாய் சிலருக்கு
கண்ணாடி,
சில பெண்களுக்கு
மூக்குத்தி மோகம் வேறு வந்து விடுகிறது
காதுகள் இரண்டு அதில்
தொட்டில் போல ஏதேனும் தொங்க விட்டு
யுவன்களும் யுவதிகளும் செய்யும்
தொல்லை
இவைகளின் சுமை போதாதென்று
இப்போது புதிதாய் தொங்குகிறது
மாஸ்க் ஒன்று,
தாடி வைத்து திரியும் ஆண்களையும்
நீளமான சடை இருந்தால்தான் அழகென்று நம்பும் பெண்களையும்
என்னதான் செய்வது,
தலைக்கு குளிக்காததால்
பேன்களின் சுமையோடு சிலர்
இவர்களில் எனக்கு பிடித்தவர்கள்
கிழவர்களும் கிழவிகளும்தான்
பற்கள் இல்லாததால்
பாரம் சற்றே குறைவு,
இவைகளைவிட
இந்த தமிழர்களின்
தொல்லைதான் தாங்கவில்லை..
இருக்கும் பாரம் போதாதென்று
இவர்களுக்கெல்லாம்
தமிழன் என்ற
தலைக்கணம் வேறு..
என் சுமையை குறைக்க
ஏதும் வழி இல்லையா
கடவுளிடம் கழுத்து
புலம்பியது..
மனிதர்களுக்குகூட பரவாயில்லை
என் தலைக்கு மேல்
ஒருத்தி அமர்ந்திருக்கிறாளே
அந்த சுமையை என்ன செய்வது,
சிவபெருமானும் சினுங்கினான்..
